தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்பொழுது திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். நடிகை நயன்தாராவின் நடிப்பில் அவரின் 75 வது திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன், கடந்த டிசம்பர் மாதம் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் அன்னபூரணி. இத்திரைப்படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
மேலும் இப்படத்தில் நடிக்க நயன்தாராவுடன் நடிகர் ஜெய், கே எஸ் ரவிக்குமார், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் வெளியாகி ஒருபுறம் நல்ல விமர்சனத்தை பெற்றாலும், படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு சில காட்சிகள் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற சில வசனங்கள் சர்ச்சையானதை தொடர்ந்து netflix தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டது. இதில் முக்கியமாக ராமர் அசைவம் சாப்பிட்டதாக வரும் வசனம் தான் சர்ச்சைக்கு முக்கிய காரணமாகவும் கருதப்பட்டுள்ளது.
மேலும் ஒரு சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து அன்னபூரணி திரைப்படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்குவதாக ஜி ஸ்டுடியோஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘ஜெய் ஸ்ரீ ராம் எனக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் ‘அன்னபூரணி திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகி இருப்பது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது என்றும் மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இத்திரைப்படத்தை உருவாக்கினோம். யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. நானும் கடவுள் நம்பிக்கை கொண்டவர் தான். நாடு முழுவதும் இருக்கும் கோவில்களுக்கு அடிக்கடி செல்கிறேன். இதை வேண்டுமென்றே செய்யவில்லை மனம் புண்பட்டிருப்பவர்களுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். தணிக்கை குழுவால் சான்று அளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று’ என்று கூறி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதோ அந்த பதிவு…