கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவரின் இயற்பெயர் கருப்பு ராஜா என்பதாகும். 2003 ஆம் ஆண்டு பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கஞ்சா கருப்பு. கஞ்சா தோட்டத்தில் வேலை செய்பவராக அந்த திரைப்படத்தில் கருப்பு அறிமுகப்படுத்தப்பட்டார். அதனால் தன் பெயரை கஞ்சா கருப்பு என்று வைத்துக் கொண்டார்.

தொடர்ந்து ராம், சிவகாசி, பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், நாடோடிகள் ஆகிய படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் கஞ்சா கருப்பு. கிராமத்து பாணியில் இவரது மதுரை தமிழ் உச்சரிப்பு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருந்தது. களவாணி திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவை நடிகராகவும் அறை எண் 35 ல் கடவுள் என்ற திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் கஞ்சா கருப்பு.
அடுத்ததாக சண்டக்கோழி, கோடம்பாக்கம், சிவப்பதிகாரம், தாமிரபரணி, மதுரவீரன், அழகிய தமிழ் மகன், பிடிச்சிருக்கு, தெனாவட்டு, யோகி, கற்றது களவு, வேங்கை, நிமிர் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் கஞ்சா கருப்பு. இது தவிர தனிப்பட்ட வாழ்க்கையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் செலவுகளையும் அனாதை குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் கஞ்சா கருப்பு.

இப்படி பிரபல நகைச்சுவை நடிகராக இருந்த கஞ்சா கருப்பு ஒரே படத்தின் மூலம் தனது சொத்துக்களை எல்லாம் இழந்து ஏழையானார். அது 2014 ஆம் ஆண்டு வேல்முருகன் போர்வெல் என்ற திரைப்படத்தை இவர் தயாரிக்க வேண்டும் என்ற முடிவு எடுத்ததுதான் காரணமாக கூறப்படுகிறது. அவரது நண்பர்கள் எவ்வளவோ கூறியும் இந்த படத்தை தயாரிப்பதாக முடிவு செய்து படத்தை ஆரம்பித்த கஞ்சா கருப்பு இந்த படம் ஆரம்பமான பின்னர் பாதி வரை மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. அதற்குப் பிறகு ஆன செலவுகளை அவரால் ஈடுகட்ட முடியவில்லை. அதனால் பெரும் தொகையை இழந்து தனது சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டிற்கு குடி பெயர்ந்து ஒரே படத்தின் மூலம் ஏழையாக ஆகியிருக்கிறார் கஞ்சா கருப்பு.
