ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். கீழக்கரையில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ராஜ்கிரன் அவர்களின் இயற்பெயர் முகைதீன் அப்துல் காதர் என்பதாகும். சினிமாவில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர் ராஜ்கிரன். நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலு அவர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியதும் ராஜ்கிரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1991 ஆம் ஆண்டு தனுஷ் அவர்களின் தந்தையான கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே திரைப்படத்தை ராஜ்கிரன் தயாரித்து அதில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வெற்றி பெற்று வெள்ளிவிழா கண்டது. மேலும் தனது நடிப்பிற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருதினை வென்றார் ராஜ்கிரன்.
தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்களை இயக்கி தயாரித்து நாயகனாகவும் நடித்து புகழ்பெற்றார் ராஜ்கிரன். தமிழ் சினிமாவில் முதலில் அதிக சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வாங்கியது ராஜ்கிரன் அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு பல முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்தார் ராஜ்கிரண். பாண்டவர் பூமி, சண்டக்கோழி, சண்டக்கோழி 2, வேங்கை ஆகிய திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ராஜ்கிரன். தனது நடிப்பிற்காக ஒரு ஃபிலிம்பேர் விருது 4 தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார் ராஜ்கிரண்.
இயல்பிலேயே மிகவும் நல்ல குணத்தையும் பிறருக்கு உதவும் குணத்தையும் கொண்டவர் ராஜ்கிரன். அப்படி ஒரு பிரபல வேட்டி நிறுவனம் ராஜ்கிரனை விளம்பரத்தில் நடிப்பதற்காக அணுகியது. அதற்காக கோடி ரூபாய்க்கு மேல் தருவதாகவும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஒரே வார்த்தையில் ராஜ்கிரண் அந்த விளம்பரத்தில் நடிக்காமல் மறுத்துவிட்டார்.
அதற்குக் காரணமாக அவர் கூறியது என்னவென்றால், ஒரு விளம்பரத்தில் நடிக்க வைக்க நீங்க எனக்கு இத்தனை கோடி ரூபா தரேன்னு சொல்றீங்க. வேட்டி சாதாரண மக்கள் உடுத்துற ஒரு துணி. நான் இந்த விளம்பரத்துல இவ்வளவு கோடி ரூபாய் வாங்கி நடிச்சு கொடுத்துட்டேன் அப்படினா எனக்கு கொடுக்கிற சம்பளம் எல்லாத்தையும் நீங்க வேஷ்டியில் தானே விலையை ஏற்றி வைப்பீங்க அப்போ சாதாரண மக்கள் எப்படி வந்து அந்த துணியை வாங்கி உடுத்த முடியும் என்று சொல்லி அந்த விளம்பரத்தில் நடிக்காமல் மறுத்து விட்டாராம் ராஜ்கிரன்.