இரண்டு நாட்களில் கார்த்திகை மாதம் தொடங்கவிருக்கிறது. கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் சீசன் தான். தமிழகம் கேரளா ஆந்திரா என பல இடங்களில் இருந்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு பக்தர்கள் வருவர். கன்னி சாமிகளும் வருவார். இதனால் அங்கு கூட்டம் அலைமோதும்.

பக்தர்களின் வசதிக்காக பல தரப்பட்ட அறிவிப்புகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டு இருக்கிறது. அது என்னவென்றால் முதலாவதாக சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் புக்கிங் செய்த பக்தர்கள் சபரிமலை வந்து திரும்பி விட்டு செல்லும் வழியில் கேரளாக்கு உள்ளேயே விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டால் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. மேலும் அவர்களது உடலை சொந்த ஊர் வரை எடுத்துச் செல்லும் செலவையும் தேவஸ்தானமே பார்க்கும் என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும் கடந்த வருடம் 7500 வாகனங்கள் நிற்பதற்கு இட வசதி செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் கூடுதலாக 2000 வாகனங்கள் நிற்க வைப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 15ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்க இருப்பதால் அன்றைய தினம் 40 லட்சம் டின் அரவண பாயாசம் பக்தர்களுக்காக தயாராக இருக்கும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

இது மட்டுமல்லாமல் ஆன்லைனில் தரிசனத்திற்கு புக்கிங் செய்பவர்கள் பெரும்பாலானோர் வராமல் இருப்பதால் நேரடியாக சபரிமலையில் தரிசன டிக்கெட் புக்கிங் செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த வகையிலும் பக்தர்கள் சிரமப்படாமல் தரிசனம் செய்து வர வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசனம் பல வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.
