அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் கோவை நாகு தலைமையில், அவரது ஆதரவாளர்கள் ஈரோட்டில் நடைபெற உள்ள தவெக மாநாட்டுத் திடலில் அதிகாரப்பூர்வமாகத் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது. ஈரோட்டில் டிசம்பர் 20, 2025 அன்று நடைபெறவிருக்கும் பிரம்மாண்டமான தவெக பொதுக்கூட்டத்திற்குத் தயாராகி வரும் வேளையில், மற்ற கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவது அக்கட்சியின் பலத்தை அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது.
நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், கொங்கு மண்டலத்தில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணைவது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது
