தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிக்குள் முக்கியத் தலைவர்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால கசப்புகளை மறந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணிக்குள் இணைக்க பாஜக தரப்பு ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.
பாஜக தலைமையிலான இந்த உத்தேசக் கூட்டணியில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா), புதிய தமிழகம், தமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் ஓரணியில் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
