அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்றது முதலே சர்வதேச அரசியல் களம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் மீது அதிரடியாக வரிகளை விதித்த ட்ரம்ப், பின்னர் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் அந்த முடிவில் பின்வாங்க நேரிட்டது. ஒருபுறம் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தான் தகுதியானவர் என்று அவர் கூறிக்கொண்டாலும், ஈரான் அணு ஆயுத விவகாரத்தை முன்னிறுத்தி அந்த நாட்டின் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரமாக நீடித்து வருகிறது. இந்த மோதலால் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது.
போர்ச் சூழல் ஒருபுறம் இருக்க, அமெரிக்க ராணுவ நிர்வாகத்திலும் ட்ரம்ப் அதிரடி மாற்றங்களைப் புகுத்தி வருகிறார். கடந்த 2023-ல் ஜோ பைடன் அரசால் நியமிக்கப்பட்ட ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை, பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ராண்டி ஜார்ஜ் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜெனரல் கிறிஸ்டோபர் லானோவ் அமெரிக்க ராணுவத்தின் தற்காலிக தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். போர் முனையில் பின்னடைவுகள் ஏற்பட்டு வரும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உயர் மட்ட அதிகார மாற்றம், அமெரிக்க அரசியலிலும் ராணுவ வட்டாரத்திலும் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
