கடந்த சில நாட்களாகவே எங்கு திரும்பினாலும் பருத்திவீரன் பஞ்சாயத்து தான். அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பட்ஜெட்டை தாண்டி அமீர் செலவு செய்து விட்டார் அவரால் தனக்கு 2 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் என்றெல்லாம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் பருத்திவீரன் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது உண்மையில் என்ன நடந்தது? எதனால் பட்ஜெட் அதிகரித்தது என்பது போன்ற பல தகவல்களை இயக்குனர் அமீர் நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது, “எல்லாரும் பட்ஜெட் அதிகமாகி விட்டது என்று கூறுகிறார்களே தவிர உண்மையில் என்ன நடந்தது என்பதை யாருமே யோசிக்கவில்லை. வரலாறு தெரிந்தவர்களுக்கு நான் கூறுவது புரியும். பருத்திவீரன் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்த சமயம் 2005 அல்லது 2006 அந்த ஆண்டில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்தது.

தொடர்ச்சியாக 28 நாட்கள் மழை பெய்தது. நான் பார்த்து வைத்த லொகேஷன் எல்லாம் மழையில் மூழ்கி இருந்தது. ஷூட்டிங் தொடங்கிய சில நேரங்களிலேயே வெளிச்சம் போய் கருமேகங்கள் கூடிவிடும். ஆனால் அந்த படத்தில் நீங்கள் எங்காவது கருமேகத்தை பார்க்க முடியுமா? அந்த 28 நாட்கள் வீணானது யார் தவறு? அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? எல்லா பொறுப்பையும் என் தலையில் ஏற்றினால் நான் என்ன செய்வது?” என மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார்.

