CINEMA
கருணாதிநிதி, ஜெயலலிதாவை போல, விஜய்காந்தி மரணத்திலும் சதி நடந்துள்ளது.. பரபரப்பை கிளப்பிய பிரபல இயக்குனர்..
மலையாள திரைப்பட உலகில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன். நிவின் பாலி நடிப்பில் வெளியான ”நேரம்” படத்தின் மூலம் தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், ”பிரேமம்” படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். கடைசியாக நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கோல்ட் படத்தை இயக்கியிருந்தார். அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில், தான் ஆட்டிசம் நோயின் ஒரு வகையால் பாதிக்கப்பட்டிருப்பதால், இனி முழு நீளத் திரைப்படங்களை இயக்க முடியாது எனவும், விளம்பர படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றை மட்டுமே இயக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவரது சமீபத்திய சமூக வலைதள பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு அவரது முகநூல் பக்கத்தில், நிர்மலா சீதாராமனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், சினிமாத்துறையினருக்கு ஏன் ரிசர்வ் வங்கி கடன் அளிப்பதில்லை எனவும், ஆர்.ஆர்.ஆர் படம் ரூ. 500 கோடி செலவில் உருவாகி ரூ. 1000 கோடியை வசூலித்துள்ளது, தயாரிப்பாளருக்கு எப்படி அந்த 500 கோடி கிடைத்தது. என்பதை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து, கேரள அரசியல் தொடர்பாக நடிகர் சுரேஷ் கோபி, மறைந்த கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி மகன் ஆகியோர் தொடர்பான சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்திருக்கும் நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அதில், ”தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்ச்சர் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க கோரியிருந்தேன் அதற்குள் அவர்கள் தற்போது விஜயகாந்தையும் கொன்றுவிட்டனர். ஏற்கனவே, தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உலகநாயகன் கமலையும் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் நீங்கள் இதை பொருட்படுத்தாமல் இருந்தால், விரைவில் நீங்களோ அல்லது உங்களது தந்தை மு.க. ஸ்டாலினோ கொல்லப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இதே போன்று நடிகர் அஜித்தை குறிப்பிட்டு எழுதியிருக்கும் பதிவில், “நடிகர் நிவின் பாலி மற்றும் உங்களது உதவியாளர் சுரேஷ் சந்திரா மூலம் நீங்கள் அரசியலுக்கு வரயிருப்பது குறித்து அறிந்தேன். இது நடந்து பல ஆண்டுகள் கடந்த பிறகு பொது நிகழ்ச்சிகள் அல்லது அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இதன்மூலம் தெரியவருவது என்னவென்றால் ஒன்று நீங்கள் பொய் சொல்லி இருக்க வேண்டும் அல்லது நீங்கள் சொன்னதை நீங்களே மறந்திருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு எதிராக யாராவது இருக்க வேண்டும். இந்த மூன்றில் ஒரு காரணமும் இல்லையென்றால், நீங்கள் எனக்கு பொதுவெளியில் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும். ஏனெனில் நான் உங்களை நம்புகிறேன். மக்களும் உங்களை நம்புகிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவுகள் அனைத்தும் சர்ச்சைக்குரியதாக இருக்கும் நிலையில், இதை எழுதியது உண்மையில் அவர் தானா? அவருக்கு ஏற்பட்ட நோயின் பாதிப்பு தான் இதற்கு காரணமா? அல்லது அவரது சமூக வலைதள கணக்குகளை யாராவது ஹேக் செய்து விட்டார்களா? என்ற கேள்வி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. உண்மை என்னவென்பதை இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தரப்பில் இருந்து யாரேனும் விளக்காதவரை இந்த மர்மம் நீடிக்கும்.