தமிழக பாஜக மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா, யூடியூப் சேனலில் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் தன்னை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவதூறாகப் பேசியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இப்புகாரைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் . அவ்வாறு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், தமக்கான நீதியைத் தேடிக் கொள்ளும் வகையில் தாமே அவர்கள் மீது ஏதேனும் ஒரு கடுமையான செயலில் ஈடுபட நேரிடும் என்றும் ஆவேசமாக எச்சரித்தார்.
இந்தச் சந்திப்பின் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் மல்கப் பேசிய அலிஷா அப்துல்லா, இத்தகைய நபர்கள் தொடர்ந்து பெண்களை மட்டுமே குறிவைத்து இழிவாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார் . மேலும், தன்னைப்பற்றி மிகவும் கொச்சையான ஆபாச வார்த்தைகளால் பேசியதோடு மட்டுமின்றி தனக்குப் பிறந்த குழந்தைகளை தமிழக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்துடன் இணைத்து மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்துள்ளதாகவும் தனது புகாரில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
