வடிவேலுவுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் பாவா லட்சுமணன். பல காமெடி காட்சிகளில் இவரது நடிப்பு ரசிகர்கள் பலரையும் ரசிக்க வைத்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு வடிவேலுவுடன் இணைந்து இவர் நடிக்கவே இல்லை. சமீபத்தில் கூட உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாவா லட்சுமணன், தான் கடந்து வந்த பாதையை குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது “அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் ஹீரோவாக நடிக்க என்னை ஒரு சினிமாக்காரர் அழைத்துச் சென்றார். அங்கே பாரதிராஜாவின் சகோதரரை சந்தித்தோம்.
அவர் எங்களை பாரதிராஜாவிடம் அழைத்துச் சென்றார். பாரதிராஜா என்னை மேலும் கீழுமாக பார்த்தார். ‘ரெண்டு வருஷம் கழிச்சி கூப்புட்டு வாங்க’ என்று பாரதிராஜா கூறிவிட்டார். அதன் பின் ஒரு நாள் பாரதிராஜா ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பந்து அவரது காரின் மேல் பறந்து வந்து விழுந்திருக்கிறது.
அந்த பந்தை எடுக்க ஒரு பையன் வந்தார். அந்த பையன் யார் என்று பாரதிராஜா கேட்டபோது அது நடிகர் முத்துராமனின் பையன் என்று கூறினார்கள். அவ்வாறுதான் கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடித்தார்” என்று கூறினார்.
அதன் பின் இயக்குனர் விக்ரமனிடம் பணியாற்றினார் பாவா லட்சுமணன். அந்த சமயத்தில் விக்ரமன் தன்னை சொந்த தம்பி போல் பார்த்துக்கொண்டதாக நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.