‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துப் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, மே மாதம் நடைபெற்ற வைர நகை கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் அணிந்து வந்த உடை தொடர்பாகச் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இச்சச்சை குறித்துத் தற்போது வாய் திறந்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “நான் எனக்குப் பிடித்த உடையையே அணிந்து வந்தேன். ஆனால், அங்கே வந்திருந்த புகைப்படக் கலைஞர்கள் எனது முகத்தை மையப்படுத்தாமல், கேமராக்களை தவறான மற்றும் வித்தியாசமான கோணங்களில் வைத்துப் படம் பிடித்தனர். அது எனக்கு மாபெரும் அசௌகரியத்தையும், எனது தனிப்பட்ட எல்லையை மீறிய உணர்வையும் தந்தது” எனக் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “கலாச்சாரம் என்பது பெண்களின் மார்பகத்திலோ அல்லது அவர்கள் அணியும் உடைகளின் நீளத்திலோ இல்லை; நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதில் இருக்கிறது. நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை, பெற்றோர் கைவிடப்படும் சோகம் என எவ்வளவோ விஷயங்கள் இருக்க, என்னுடைய மார்பகத்தைப் பற்றி ஏன் இவ்வளவு தீவிரமாக விவாதிக்க வேண்டும்?” என நெட்டிசன்களுக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
