அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல்கள் மற்றும் அதிருப்திகள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அம்மா பேரவையின் இணைச் செயலாளருமான ராஜவர்மன் தற்பொழுது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அண்மைக்காலமாக கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இடமும் இல்லை என்றும், மாறாக நடிப்பவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் அவர் தனது வீடியோவில் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ரத்தமும் சதையுமாய் வளர்த்து, கட்டிக்காத்த அதிமுகவை தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முற்றிலும் சீரழித்துக் கொண்டிருக்கிறார் என்று அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவற்றுடன், தற்போதைய சூழலில் வெறும் பணபலம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் இடமுண்டு என்றும், தொண்டர்களின் உழைப்பு மதிக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டி, தனது விலகல் முடிவை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
