தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்.
அதன் வெளிப்பாடாக நேற்று செங்கோட்டையன் இபிஸ்க்கு எதிராக திரும்பி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என பத்து நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார். அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக நான்கு அணிகளாக உடைந்ததற்கும் பாமகவில் தற்போது நிலவும் பிரச்சனைக்கும் பாஜக தான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக எங்க இருக்கிறதோ அங்கு சர்வ நாசம் தான் உருவெடுக்கும். அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்றாக இணைந்தால் கூட வேறு ஒருவர்தான் எதிர்க்கட்சி தலைவராக இருப்பார். அவரது வீட்டு வாசலில் இபிஎஸ் சென்று நிற்கும் நிலை தான் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
