தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தைகள் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய கட்சி 170 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் மீதமுள்ள 64 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் அதிமுக 150 இடங்களில் மட்டும் போட்டியிட்டு மீதமுள்ள 84 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுத்துள்ளது.
அதில் பாஜகவிற்கு 40 தொகுதிகள் மற்றும் பாமகவுக்கு 15, தேமுதிகவிற்கு 10, அமமுக கட்சிக்கு எட்டு என பிரித்து கொடுத்தால் மட்டுமே கூட்டணி வலுவாக அமையும் என்பது டெல்லியின் புது கணக்காக உள்ளது. ஆனால் 35 தொகுதிகள் வரை பாஜகவிற்கு வழங்க அதிமுக சம்மதித்ததாக தெரிகிறது. அதேசமயம் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வில் அதிமுகவின் விருப்பமும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு டெல்லி டபுள் ஓகே சொல்லி உள்ளதாக அரசியல் நோக்கங்கள் தெரிவிக்கின்றன.
