தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை புதிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. இதற்காக, 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடம் நடத்தும் சுமார் 1,991 பட்டதாரி ஆசிரியர்களுக்குச் சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இந்தப் பயிற்சியானது வரும் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்குத் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மண்டல அளவில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) ஒருங்கிணைக்கும் இந்தப் பயிற்சியானது, ஆசிரியர்கள் அங்கேயே தங்கிப் பயிலும் ‘உண்டு உறைவிடப் பயிற்சியாக’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தங்களது பாடப்புத்தகங்களை உடன் கொண்டு வர வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய நாட்களில் பணி விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக ஆங்கிலப் புலமை பெற வேண்டும் என்பதே இந்த மெகா பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
