உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹேராம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகியாகவும் அறியப்பட்டார். இவர் முதன் முதலில் தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படம் மூலம் தான் பிரபலமானார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சுருதிஹாசனுக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் 3 என்ற திரைப்படத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

அந்தத் திரைப்படம் வெளியானபோது கிடைத்த வரவேற்பை காட்டிலும் ரீ ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. இன்றளவும் அந்த திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா மற்றும் விஜய் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்தார். இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. தமிழ் சினிமாவில் பெரிய அளவு திரைப்பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பினார். அங்கு மூத்த நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிசியான நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமானது குறித்து பேசி உள்ளார். அதில், ஏழாம் அறிவு தனக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து எனக்கு வந்த 3 பட வாய்ப்பில் அந்த படத்தில் நடிப்பது எனக்கு மிக சிறந்த அனுபவத்தை கொடுத்தது. நான் பத்து வருடம் கழித்து இப்போதுதான் நான் நடித்த ஜனனி கதாபாத்திரம் ரசிகர்களுக்கு எவ்வளவு பிடித்ததாக இருந்தது என்பதை புரிந்து கொண்டேன்.

ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடம் எனக்கு எந்த ஒரு கதையும் கிடைக்கவில்லை. யாருமே எனக்கு கதை சொல்ல முன்வரவில்லை. அப்போது நான் யோசித்து இருக்கிறேன். ஒருவேளை இந்த திரைப்படத்தில் நடித்த என்னுடைய கதாபாத்திர மக்களுக்கு பிடிக்கவில்லை என்று தோன்றியது. அதன் பிறகு தான் பூஜை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஹரி சார் எனக்கு வழங்கினார் என்று ஸ்ருதிஹாசன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
