இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் என்ற சாதனையைப் படைத்தவர் ஆச்சி மனோரமா. 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரின் திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.
தமிழகத்தின் ஐந்து முதல்வர்களோடு இணைந்து நடித்திருந்தாலும் மனோரமா தன்னை எந்த அரசியல் கட்சியுடனும் இணைத்துக் கொள்ளவில்லை. 50 களின் இறுதியில் தொடங்கிய அவரின் திரைவாழ்க்கை 2010 கள் வரை தொடர்ந்தது. கடைசியாக அவர் ஹரி இயக்கிய சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மனோரமா இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் நடிப்பை ஏனோ தானோவென்று எடுத்துக் கொள்ள மாட்டாராம். மிகுந்த அர்ப்பணிப்போடு அனுகுவாராம். அதற்கு உதாரணமாக நடிகை லட்சுமி ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
மனோரமாவுடன் லட்சுமி ஒருமுறை வெளியூர் ஷுட்டிங்குக்காக ரயிலில் பயணம் செய்தாராம். ஒன்றாக ஜாலியாக அனைவரும் பேசிக் கொண்டே பொழுதை போக்கியுள்ளனர். அந்த களைப்பில் இரவில் அனைவரும் ஆழ்ந்து உறங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு பாட்டுச் சத்தம் கேட்டிருக்கிறது. அதைக் கேட்டு உறக்கம் கலைந்த நடிகை லட்சுமி கண்விழித்துப் பார்க்கும்போது மனோரமா ஏதோ பாட்டை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாராம்.
இதைப் பார்த்து அதிர்ச்சியாகி அவரிடம் என்னவென்று விசாரிக்க மறுநாள் ஷுட்டிங்கில் அவர் சம்பந்தப்பட்ட காட்சியில் வசனத்திற்கு இடையே பாடுவது போல ஒரு பாடல் இருக்கிறது என்று சொன்னார்களாம். அதற்காகதான் அந்த பாடலை பாடி மனப்பாடம் செய்து கொண்டிருந்தாராம் மனோரமா. இந்த சம்பவத்தைப் பார்த்து லட்சுமி பிரம்மித்து போனாராம். இப்படி ஒரு அர்ப்பணிப்பான நடிகரா என வியந்துள்ளார்.
அவ்வளவு அர்ப்பணிப்பு இருந்ததால்தான் அவரால் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன்னுடைய கடைசி காலம் வரை புகழ் வெளிச்சத்தில் இருக்க முடிந்துள்ளது என்றால் அது மிகையாகாது.