ரயில் பயணங்கள் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் ஜோதி. ஆரம்பத்தில் இவர் நடித்த ஒருசில திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கலாம் என்ற எண்ணத்தோடு இருந்த இவருக்கு அடுத்தடுத்து பல சோகங்கள் தான் இடம்பெற தொடங்கியது. சினிமாவில் இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் இவருடைய சினிமா கேரியரில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் என்றால் அது ரஜினியுடன் நடித்த புதுக்கவிதை, டி ராஜேந்தர் உடன் இணைந்து நடித்த ரயில் பயணங்கள் போன்ற படங்கள் தான்.

இதில் புதுக்கவிதை என்ற படத்தில் இடம்பெற்ற வெள்ளை புறா என்ற பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. இவருடைய சினிமா பயணம் 1979 ஆம் ஆண்டு ஆரம்பித்த நிலையில் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வந்தார். குறிப்பாக 1981 ஆம் ஆண்டு ரயில் பயணங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த பிறகு பல வருடங்களுக்கு ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஒரு கலக்கு கலக்கினார்.

ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சரியாக கிடைக்காததால் சித்தி, அம்மா, அண்ணி மற்றும் தங்கை போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். அதன்படி 2000 காலப்பகுதியில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், வண்ண தமிழ் பாட்டு மற்றும் உள்ளம் கொள்ளை போகுதே போன்ற படங்களில் இவர் நடித்தார். இறுதியாக 2003 ஆம் ஆண்டு அன்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்.

பிறகு யாருமே எதிர்பாராத வகையில் மார்பக புற்றுநோய் இவருக்கு ஏற்பட்டது. இதனை ரொம்ப தாமதமாக கண்டுபிடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்ற போதும். இவருடைய உடல் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இவர் தனது கடைசி நாட்களில் ஈசிஆரில் இருக்கக்கூடிய ஒரு வீட்டில் தன்னுடைய மகளுடன் தான் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்ட ஜோதி 2007 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தன்னுடைய 44 வயதில் காலமானார்.
