பிரபல இயக்குனரான பாலா விக்ரமை வைத்து சேது படத்தை இயக்கினார். இந்த படம் 1999-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அபிதா ஹீரோயினாக நடித்தார். சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். விக்ரமுக்கு சீயான் என்ற பட்டப் பெயர் இந்த படத்தில் இருந்து தான் வந்தது. சேது படம் ஹிட் ஆனதால் அபிதா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அபிதா சீறிவரும் காளை, பூவே பெண் பூவே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் சீரியல் பக்கம் திரும்பினார். சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் மெகா சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அந்த சீரியல் சூப்பர் ஹிட் ஆனது. கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான மாரி என்ற சீரியலிலும் நடித்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு அபிதா திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் அபிதா அளித்த பேட்டியில் கூறியதாவது, சேது படம் இவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்கும் என யாருமே எதிர் பார்க்கவில்லை. அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு டீன் ஏஜ் வயசு. புதுமுகம் தேவை என்று பாலா சார் தேடிக்கொண்டிருந்தார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நிறைய பேரை ஆடிஷன் பண்ணாங்க. என் போட்டோவை பார்த்த பிறகு என்னை அழைத்தார்கள். சேது படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து பலரும் கிண்டல் பண்ணாங்க.

ஹீரோ மெண்டல், ஹீரோயின் செத்துடுவாள் என்றால் யாரும் படம் பார்க்க வர மாட்டாங்க. இதனால் இரண்டு பேரும் சேர்வது போல கிளைமாக்ஸ் மாற்றுங்கள் என பல பேர் சொன்னாங்க. ஆனால் பாலா சார் இந்த கதைக்கு இப்படி கிளைமாக்ஸ் வைத்தால் தான் நன்றாக இருக்கும். படம் ரிலீஸ் ஆகவில்லை ஓடவில்லை என்றாலும் பரவாயில்லை. கிளைமாக்ஸ் இப்படித்தான் வைப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அவர் நினைத்த மாதிரி மக்கள் கிளைமாக்சை ஏற்றுக் கொண்டார்கள் எனக் அபிதா கூறியுள்ளார்.

