நடிகர் தம்பி ராமையா இயக்கிய படங்களா இதெல்லாம்… பலரும் அறியாத ஆச்சர்ய தகவல்!

By vinoth

Published on:

actor thambi ramayaiah

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல தளங்களில் இயங்கி வருபவர் தம்பி ராமையா. வடிவேலுவுக்கு நகைச்சுவை டிராக் எழுதும் குழுவில் முக்கிய அங்கத்தினாராக இருந்தவர். அதனால் வடிவேலுவின் பல நகைச்சுவை காட்சிகளில் இவரைக் காணலாம்.

ஆரம்பத்தில் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்தார். மனுநீதி, கோவில்பட்டி வீரலட்சுமி, அருள், ஜோர், கோடம்பாக்கம், ஆறு, கோவை பிரதர்ஸ், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, சில்லுனு ஒரு காதல், தனி ஒருவன், சாட்டை, விஸ்வாசம், விநோதய சித்தம் சமீபத்தில் வெளியான லால் சலாம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

   

பத்தோடு பதினொன்றாக நடித்து வந்த தம்பி ராமையாவை முன்னணி நடிகராக்கியது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படம்தான். அந்த திரைப்படத்தில் அவர் நடித்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் வேடம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அதன் பின்னர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த நிலையில் இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஆனால் அவர் பற்றி பலரும் அறியாத முகம் ஒன்று உள்ளது. அது அவர் ஒரு இயக்குனர் என்பதுதான். ஆம் தம்பி ராமையா இதுவரை 2 படங்களை இயக்கியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு முரளி, பிரதியுக்‌ஷா, நெப்போலியன் மற்றும் நாசர் நடிப்பில் அவர் மனுநீதி என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பெரியளவில் பேசுபொருளாகவில்லை. அதனால் படம் இயக்குவதில் அவருக்கு பெரிய இடைவெளி விழுந்தது.

அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு வடிவேலுவை கதாநாயகனாக்கி ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்” என்ற படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கினார். இந்த படத்துக்கு முன்னர் வடிவேலு ஹீரோவாக நடித்து இம்சை அரசன் படம் பெரிய ஹிட்டாகி இருந்ததால் இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் அவர் இயக்கத்தில் இருந்து முழுவதுமாக விலகினார்.