இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை 2. இந்த படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம். விஜய் சேதுபதி ஹீரோவாகவும் சூரி கதையின் நாயகனாகவும் நடித்த திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தை சுமார் ஒன்றரை வருட கடின உழைப்புக்கு பிறகு இன்று திரைக்கு வந்திருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

இசைஞானி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சோனா மீனா திரையரங்கிற்கு வந்த நடிகர் சூரியை ரசிகர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கமர்சியல் தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் விடுதலை 2 படத்தில் உள்ளது. இயற்கையோடு ஒன்றி எடுக்கப்பட்ட இந்த படத்தை மக்கள் அதிகம் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த படம் மக்களுக்கு வலி மிகுந்த உணர்வை கொடுக்கும். இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து விடுதலை 3 எடுப்பது குறித்து பார்ப்போம். அடுத்தடுத்து கதை நாயகனாக பயணிப்பேன். இப்போ மாமன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மாலை விடுதலை இரண்டாம் பாகம் படத்தை பார்ப்பேன் என்று சூரி கூறினார். இதனிடையே சூரியனைக் கண்டு ரசிகர்கள் சிலர் அடுத்த தளபதி, அடுத்த சூப்பர் ஸ்டார் என கத்திய நிலையில் இதனைக் கேட்டு சூரி, “எப்பா ஏய், அமைதியா இருங்கய்யா, உங்கள்ல ஒருத்தரா இருக்கிறதே நல்லது, அதுவே போதும் என கூறினார். மேலும் ரசிகர்கள் அரசியலுக்கு வருமீங்களா என்று கேட்டதற்கு பதில் அளித்த சூரி, சினிமாவே நன்றாக தான் இருக்கிறது இதிலேயே பயணிப்போம் என்று கூறினார்.
