கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அதேசமயம் பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் பிரபல நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். அவர் அந்த பள்ளி மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். தன் அப்பா சிவக்குமாருடன் மகன் கார்த்தியும் விழாவில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

அதனைப் போலவே அந்த பள்ளியில் படித்து பல்வேறு துறையில் சாதனை படைத்த முன்னாள் மாணவர்களும் மேடையில் கௌரவிக்கப்பட்டார்கள். இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு ஒரே நம்பிக்கை அரசு பள்ளிகள் தான். கல்வி என்றாலே அரசு பள்ளி தான். அகரம் அறக்கட்டளையில் இருக்கும் மாணவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான். அவர்கள் எல்லாமே முதல் தலைமுறை மாணவர்கள். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களை அரசு நன்றாக பார்த்துக் கொள்கின்றது. தமிழ்நாட்டில் கல்வி உயர்தரமாக வழங்கப்படுவது பெருமையாக உள்ளது.
![]()
என் அப்பாவின் சகோதரி என் அத்தை படிக்கும்போது கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பள்ளிக்கு செல்வதற்கே சிரமப்பட்டார் என்று கூறி கார்த்திக் கண்கலங்கினார். மேலும் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 5 லட்சம் நன்கொடை வழங்குகிறோம் என்றும் மேடையில் கார்த்தி அறிவித்தார். தன்மகன் கண்கலங்கியதை பார்த்த சிவகுமார் அதனை கண்டு உருகி கார்த்தியை ஆரத்தழுவி சமாதானப்படுத்தி அமர வைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.
