மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, நடிகர் வடிவேலுவின் அரசியல் விமர்சனங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். அதிமுக உடைந்து சிதறிவிட்டதாக வடிவேலு கூறியதற்குப் பதிலடி கொடுத்த அவர், “இது எங்கள் வீட்டுப் பங்காளி சண்டை, இது நாளைக்கே முடிந்துவிடும்; இதில் தலையிட நீ யார்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், வடிவேலுவை ‘வீணாய்ப்போனவர்’ என ஒருமையில் சாடியதுடன், அதிமுகவின் உள்விவகாரங்களைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய கஞ்சா கருப்பு, வடிவேலுவை “ஆமை” என உருவகப்படுத்தி விமர்சித்ததுடன், அவர் எப்போது அதிமுகவை எதிர்த்துப் பேசினாரோ அப்போதே தங்கள் கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டதாகத் தெரிவித்தார். 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்களைப் பாராட்டிப் பேசினார்.
