தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். ஆனால் அவருக்கு இந்த வாய்ப்பு மிக எளிதாகக் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் குணச்சித்திர வேடம், வில்லன் வேடம் மற்றும் ஒரு காட்சியில் வரும் வேடம் என நடித்த அவருக்கு ராஜகுமாரி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
எம் ஜி ஆருக்கு முன்னர் ஆக்ஷன் படங்களில் கலக்கி வந்தவர் ரஞ்சன். அவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்தி சினிமாவிலும் சென்று வெற்றிகளைக் கொடுத்தவர். ரஞ்சன் ஹீரோவாகவும் எம் ஜி ஆர் வில்லனாகவும் நடித்த படம்தான் 1945 ஆம் ஆண்டு வெளியான சாலிவாஹனன். ரஞ்சன் மற்றும் எம் ஜி ஆர் என இருவருமே வாள் சண்டையில் பிரமாதப்படுத்துவார்கள் என்பதால் இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என முடிவு செய்து படமாக்கியுள்ளனர்.
ஆனால் படப்பிடிப்பின் போது எம் ஜி ஆர், ரஞ்சன் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. ஷூட்டிங் காட்சியில் இருவரும் நிஜ சண்டை போல நீயா நானா என விட்டுக்கொடுக்காமல் சண்டை புரிந்துள்ளனர்.. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு என்பதை மறந்து ரஞ்சனின் வாள் தனிப்பட்ட முறையில் எம் ஜி ஆரின் உடலை பதம் பார்க்கத் துவங்க எம் ஜி ஆர் இயக்குனர் பி. என். ராவிடம் முறையாக புகார் செய்யத் துவங்கினார். ஆனால் இயக்குனரோ ஹீரோ ரஞ்சனுக்கு எதிராக ஒன்றும் பேச முடியாத சூழல்.
வேறு வழியில்லமால் எம்ஜிஆரும் தற்காப்புக்காக தன் முழுத்திறமையும் வாள் வீச்சில் வெளிப்படுத்தத் துவங்கினார் . எம் .ஜி .ஆர் விட்டுக்கொடுக்காமல் சரிக்கு சமமாகச் சண்டை செய்வதை ஜீரணிக்க முடியவில்லை . அப் படத்தின் சண்டைப்பயிற்சியாளரருடன் சேர்ந்து எம் ஜி ஆருக்கு உடல் ரீதியாக சில நெருக்கடிகளைக் கொடுக்கும்படி சண்டைக்காட்சிகளை அமைக்க முடிவு செய்தனர்.
இதனால் எம் ஜி ஆர் வழக்கம் போல சண்டை போட முடியாத அளவுக்கு காட்சிகளை வைத்து அவரை சொதப்ப வைத்துள்ளனர். இதனால் இயக்குனரிடம் எம் ஜி ஆருக்கு திட்டுக் கிடைத்துள்ளது. அதனால் சோர்ந்து போய் உட்கார்ந்துள்ளார் எம் ஜிஆர். அப்போது அந்த படத்தில் துணை நடிகராக இருந்த சின்னப்ப தேவர் “ராமச்சந்திரா வருத்தப் படாதே. சினிமாவில் உனக்கும் ஒரு காலம் வரும் அன்று நீ நாயகனாக நடித்து வெற்றி வாகை சூடுவாய் . உன்னிடம் அதற்கான எல்லா தகுதியும் இருக்கிறது” எனக் கூறியதும் அவரின் கையைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ந்துள்ளார்.
அப்போது தேவர் “எனக்கு இப்போது நன்றி சொல்லாதே. நீ கதாநாயகன் ஆனதும் எனக்கு கால்ஷீட் கொடு” எனக் கூறியுள்ளார். தேவர் சொன்னபடியே நடந்தது. எம் ஜி ஆர் கதாநாயகன் ஆனார். தேவரும் தயாரிப்பாளர் ஆனார். எம் ஜி ஆரோடு இணைந்து அதிக படங்கள் தயாரித்த தயாரிப்பாளர் என்ற பெருமையையும் பெற்றார் சின்னப்ப தேவர்.
