சமீபத்தில் வெளியான இறுகப்பற்று படம் பல இறுக்கமான மனிதர்களின் மனதை லேசாக மாற்றியுள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையேயான புரிதலை அவ்வளவு அழகாக கூறியிருந்தார்கள். அதில் விதார்த்தின் மனைவியாக உடல் எடை அதிகரித்த ஒரு பெண் அவர் கணவரால் நிராகரிப்படும் கேரக்டரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அபர்ணதி பலரின் பாராட்டையும் தட்டி சென்று விட்டார்.

பிரபல சேனல் ஒன்று நடிகர் ஆர்யாவை வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோ நடத்தியது அதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அபர்ணதி. இந்நிலையில் சமீபத்தில் அந்த நிகழ்ச்சி குறித்து பேசிய அவர் என்ன காரணத்திற்காக அதில் பங்கேற்றேன் என்று கூறியுள்ளார். அதன்படி, “நான் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் அங்கு வரவில்லை. எங்களிடம் அவர்கள் கூறியது என்னவென்றால் ஆர்யாவை வைத்து ஒரு ஷோ நடக்கிறது. நீங்கள் கலந்து கொண்டால் அவரை சந்திக்கலாம், அவருடன் பேசலாம் உங்களுக்கு பிடித்தால் தொடரலாம் இல்லையென்றால் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினார்கள்.

அதற்கு முன்பு நான் எந்தவொரு பிரபலத்தையும் நேரில் பார்த்ததே கிடையாது. அதனால் தான் ஆர்வம் காரணமாக அதில் கலந்து கொள்ள சம்மதம் கூறினேன். ஆனால் அந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விட்டது. வேறு மாதிரியான பாடத்தை கற்று கொடுத்துள்ளது” என கூறியுள்ளார்.

