ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் வாணி, தனது அத்தை சந்தியாவுடன் இணைந்து நூதன மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். கேரளா, கர்நாடகா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் உள்ள வசதியான இளைஞர்களைக் குறிவைத்துத் திருமணம் செய்துகொள்வதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, கணவன் வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பிச் செல்வதே இவர்களின் திட்டமாகும். அண்மையில் கர்நாடக இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்த வாணி, ரயில் பயணத்தின்போது கழிவறை செல்வதாகக் கூறி நகை, பணத்துடன் மாயமானார்.
பாதிக்கப்பட்ட கணவர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், வாணி இதுவரை எட்டுப் பேரை இதேபோல் ஏமாற்றித் திருமணம் செய்திருப்பது அம்பலமானது. வாணியின் தந்தை பிரிந்து சென்ற நிலையில், சிறுவயதிலேயே தாயை இழந்த அவரை, அவரது அத்தை சந்தியா தவறான பாதையில் வழிநடத்தி இந்த மெகா மோசடியை அரங்கேற்றியுள்ளார்.
தற்போது தலைமறைவாக உள்ள வாணி மற்றும் சந்தியாவைத் தேடி ஆந்திரா மற்றும் கர்நாடகா போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாக வலைவீசி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
