தெலுங்கானா மாநிலம் நரசம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த 8 ஆண்டுகளாக ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதுகுறித்து அறிந்த ஸ்வேதாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரவீனும், ஸ்வேதாவும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் செகந்திராபாத்திற்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் திடீரென ஸ்வேதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரவீன் அவரை சொந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். அங்கு சென்றதும் பிரவீனின் பெற்றோர் ஸ்வேதாவை கவனித்துக் கொண்டனர். இதனை அறிந்த ஸ்வேதாவின் உறவினர்கள் பிரவீன் வீட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும் ஸ்வேதாவின் கை கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு தரதரவென வெளியே இழுத்து வந்து காரில் கடத்தி சென்றனர். தடுக்க முயன்ற பிரவீன் குடும்பத்தினரையும் அவர்கள் கட்டையால் தாக்கி கண்களில் மிளகாய் பொடி தூவி சென்றனர். இது தொடர்பாக பிரவீன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்வேதாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
