திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஜெயந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயந்தியின் இளைய மகள் தனது தலைமுடிக்கு ‘ஹேர் கலரிங்’ செய்துகொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயந்தி மகளைக் கண்டித்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மகள் வீட்டில் இருந்த பாத்திரங்களை அடித்து உடைத்ததால், மிகுந்த மனவேதனையடைந்த ஜெயந்தி தனது அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஜெயந்தி, அரசியலில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். பத்து ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து தனது இரு மகள்களுக்காக வாழ்ந்து வந்தவர், ஒரு சாதாரண குடும்பப் தகராறுக்காக இப்படி விபரீத முடிவெடுத்தது அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது.
தகவலறிந்து வந்த நவல்பட்டு போலீசார், ஜெயந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் அடம்பிடிக்கும் குணம் மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் மன அழுத்தங்கள் இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
