திருச்சி மாவட்டம் திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(50) தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சரவணன் குமார் என்ற மகனும், மீனா பிரியா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த 7 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனாரான வீரமுத்துவின் மனைவி லட்சுமியுடன்(45) ரமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். நேற்று ரமேஷ் குமார் லட்சுமியுடன் மாரியம்மன் கோவில் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த ரமேஷ் குமார் லட்சுமியின் கன்னத்தில் ஓங்கி அடித்தார். இதுகுறித்து லட்சுமி தனது கணவர் வீர முத்துவுடன் கூறியதும் வீரமுத்து அங்கு வந்து ரமேஷ் குமாரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் கோபம் தீராமல் ரமேஷ் குமார் வீரமுத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது லட்சுமி தனது கணவருடன் சேர்ந்து ரமேஷ் குமாரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷ் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீரமுத்துவையும் லட்சுமியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
