100 கோடி சம்பளம் வாங்கும் விஜய், 100 கோடி மக்களுக்காக…? விஜயின் அரசியல் பிரவேசம்  குறித்து நடிகர் பார்த்திபன் வெளியிட்ட வித்தியாசமான வீடியோ… வைரல்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். சினிமாவில் மட்டுமல்ல தற்பொழுது அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அவர் நேற்று  முன்தினம் தனது கட்சி பெயரை ‘தமிழக வெற்றி கழகம்’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Actor Vijay
Actor Vijay

மேலும் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், ‘அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும். என் பணிவான வணக்கங்கள். “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

   

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு என்றும்,  வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ. மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி.

vijay116

அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.”என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜயின் இந்த அரசியல் பிரவேசத்திற்கு திரைபிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

அந்தவகையில் தற்பொழுது இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் வித்தியாசமான முறையில் தளபதிக்கு வாழ்த்துக்களை தனது யூ ட்யூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, ‘ அரசியல் களத்தில் புதிதாக புரட்சி குரல் கொடுத்திருக்கும் நண்பர் விஜய்க்கு வாழ்த்து கூறும் செய்தி இது. நண்பர் விஜய்யின் கட்சிக்கு பின்புலமாய் உள்ள அர்பணிப்பு ஆச்சரியமளிக்கிறது. ரூ.100 கோடிக்கும் மேல் சன்மானம் பெறும் விஜய், 100 கோடிக்கும் மேல் ஜனத்தொகை கொண்ட இந்திய அரசியலில், தமிழக அரசியல் என்பது நாளைய இந்தியாவை வெல்வதாக இருக்க வேண்டும்.

Parthiban

தன் வருமானத்தை தியாகம் செய்துவிட்டு மக்கள் பணிபுரிய முழு நேர அரசியல்வாதியாக முன்வருவது பாராட்டுக்குரியது. எஸ்எஸ் போட்டியிலிருந்து விலகி சிஎம் போட்டிக்குள் நுழையும் ஆக்‌ஷன் அதிரடியாகவும் உள்ளது. அதிர்ந்து பேசா அமைதியே தன் அடையாளமான அன்பர் விஜய், அரசியல் களத்தில் எப்படி சமாளிப்பார் என அவர் மீதுள்ள அக்கறையால் நாம் யோசித்தாலும், அவர் சாமர்த்தியமாக ஆலோசித்துவிட்டுதான் கால் பதிக்க முழு வீச்சில் இறங்கியுள்ளார் என்றே தோன்றுகிறது. ‘அமைதியான கடலே ஆழிப்பேரலையையும் உருவாக்குகிறது’ என்பதால் மக்கள் பணிக்காக ரியல் கதாநாயகனாக உயரும் விஜய்யை நெஞ்சாரமாக வாழ்த்துகிறேன்’ என்று பார்த்திபன் இந்த வீடியோவில் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…