பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வதால் ஏற்படும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தால், தமிழகத்தில் மழைப்பொழிவு மற்றும் வானிலையில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் இந்த நிகழ்வால், கடல்நீரின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக அதிகரிக்கும். இதனால் மாநிலத்தில் ஏற்படக்கூடிய அறிவியல் ரீதியான பாதிப்புகளை முன்கூட்டியே கணித்துத் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்பேரில் சிறப்பு நிபுணர் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் கண்மணி தலைமையிலான இந்த உயர்மட்டக் குழுவில், சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் பாலாஜி நரசிம்மன் உட்பட பல்துறை வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். மாநிலத்தின் மழை அளவு மற்றும் வறட்சி சூழலைத் தீவிரமாகக் கண்காணிப்பது, ‘எல் நினோ’வால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிவது மற்றும் ஆபத்துகளைக் குறைப்பதற்கான நிவாரண ஆலோசனைகளை அரசுக்கு வழங்குவது ஆகியவை இக்குழுவின் முக்கியப் பணிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
