மும்பை அருகே உள்ள பீவாண்டியில், ஆபத்தான கட்டடம் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்த 10 ஆண்டுகள் பழமையான 4 மாடி கட்டடம் கனமழை காரணமாக நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கிடையே மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, மோப்ப நாய் படை மற்றும் கனரக இயந்திரங்கள் மூலம் தொடர் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, பலத்த சத்தம் கேட்டதால் பெரும்பாலான குடும்பங்கள் உடனடியாக வீடுகளைக் காலி செய்து வெளியேறின. மாநகராட்சி துணை கமிஷனர் அர்விந்த் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று குடியிருப்பாளர்களை வெளியேற்றினர். எனினும், அங்கு பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், உணவருந்திவிட்டு வருவதாகக் கூறிய சில பெண்களும் உடனடியாக வெளியேற முடியாத நிலையில், சில நிமிடங்களிலேயே கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
கட்டடத்தில் வசித்த சாகுல் ஹமீத் கூறுகையில், கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சத்தம் கேட்டதை அடுத்து சிலர் வெளியேறியதாகவும், மற்றவர்கள் வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்தபோதே இடி விபத்து நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மற்றொரு குடியிருப்பாளரான அபய் குமார் யாதவ், இரவு உணவை முடித்து அறையில் இருந்தபோது கேட்ட பலத்த சத்தத்தைத் தொடர்ந்து தப்பிக்க வேறு வழியின்றி முதல் மாடியில் இருந்து கீழே குதித்ததில், தனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
