உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன், தங்கையை போர்வைக்குள் பதுங்கியிருந்த கொடிய விஷப்பாம்பு கடித்ததில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கட்டிலில் இருந்த போர்வைக்குள் மறைந்திருந்த பாம்பு முதலில் 10 வயதான காமினி என்ற சிறுமியைக் கடித்துள்ளது. பின்னர், அதே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அவளது அண்ணன் பங்கஜின் காலில் சுற்றிக் கொண்டு கொடூரமாகக் கடித்துள்ளது.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 10 வயதுச் சிறுமி காமினி பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள அண்ணன் பங்கஜிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
