ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த விஷ்ணு பிரியன் என்ற காவலர், அரக்கோணத்தைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த புகாரில் கைதாகியுள்ளார். அழகு நிலையத்திற்குச் சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தைப் பயன்படுத்தி, தனக்குச் சொந்தமாக விசைப்படகுகள் இருப்பதாகவும், மீன்பிடி தொழிலில் முதலீடு செய்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை மெய்யென நம்பிய அந்தப் பெண்கள், அவரிடம் சுமார் 30 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 10 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட விஷ்ணு பிரியன், வாக்குறுதி அளித்தபடி பெண்களைத் தொழிலில் சேர்க்காமல் காலம் கடத்தி ஏமாற்றி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய அரக்கோணம் நகரப் போலீசார், மோசடியில் ஈடுபட்ட காவலரை அதிரடியாகக் கைது செய்தனர். சிறிய முதலீட்டில் பெரிய லாபம் தருவதாகக் கூறி மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
