திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை ஒன்று, குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்றி அனைவரின் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது. உசேன் பாபுவின் வீட்டின் முதன்மை வாசலின் கதவு வழியாக சுமார் 2 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் குட்டிப் பாம்பு ஒன்று உள்ளே நுழைய முயன்றுள்ளது. வீட்டின் மனிதர்கள் யாரும் கவனிக்காத நிலையில், ஆபத்தை உணர்ந்த வளர்ப்புப் பூனை உரத்த குரலில் ‘மியாவ்’ என ஆக்ரோஷமாகச் சத்தமிட்டுள்ளது.
சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் பாம்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அப்போது உசேன் பாபு பாம்பைப் பிடிக்க முயன்ற போது அது சீறவே, சற்றும் தாமதிக்காத பூனை உடனடியாகப் பாம்பின் மீது பாய்ந்து அதைக் கடித்து குதறி கொன்றது. வீட்டிலும் அருகிலும் சிறு குழந்தைகள் இருக்கும் நிலையில், சமயோசிதமாகச் செயல்பட்டு தங்களைக் காப்பாற்றிய வளர்ப்புப் பூனைக்கு உசேன் பாபுவின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
