திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப் பிரச்சினை இருந்து வந்தது. இந்தச் சிக்கலைத் தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறி, ராமலிங்கத்தை மது அருந்த ஏரிக்கரைக்கு அழைத்துள்ளார் சேட்ராஜ். அங்கு வைத்து போதையில் இருந்த ராமலிங்கத்தைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, கத்தியை அங்கேயே வீசிவிட்டு வீட்டிற்குச் சென்று நிம்மதியாகத் தூங்கியுள்ளார்.
மறுநாள் காலையில் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, “நான் ஒருவரைக் கொன்றுவிட்டேன்” என சேட்ராஜ் சரணடைந்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. அவர் அளித்த தகவலின் பேரில் மீஞ்சூர் போலீசார் ஏரிக்கரைப் பகுதியில் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். முன்விரோதம் காரணமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
