ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடுப்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த சிராஞ்சீவி என்பவரின் 27 வயது மனைவி ஷோபாவுக்கு, குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி நாயக் என்பவருடன் தவறான போன் கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தொடர்பில் இருந்த இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இவர்களது விவகாரம் கணவர் சிராஞ்சீவிக்குத் தெரியவரவே, அவர் மனைவியைக் கண்டித்துத் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி, ஆரம்பத்தில் கணவனைக் கொல்லத் திட்டமிட்ட போதிலும், பின்னர் வீட்டை விட்டு ஓடிப்போக முடிவு செய்தனர்.
கணவன் மற்றும் பிள்ளைகளைக் கைவிட்டு ஓடிய ஷோபா, குப்பம் பகுதியில் உள்ள கோயிலில் பாலாஜியைத் திருமணம் செய்துகொண்டார். இதனிடையே மனைவி காணாமல் போனது குறித்துச் சிராஞ்சீவி அளித்த புகாரின் பேரில் தேடி வந்த நிலையில், இருவரையும் கண்டுபிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தார். விசாரணையில், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக ஷோபா மிரட்டியதால் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்ததாக பாலாஜி கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
