உச்ச நீதிமன்றம் செல்வேன்.. கலைஞர் சொன்ன பாணியில் ‘நீதி கேட்டு நெடிய பயணம்’… அதிமுக இன்பதுரை எடுத்த சபதம்..! பரபரக்கும் தமிழக அரசியல்..!

By Swetha on ஆனி 3, 2026

Spread the love

ராதாபுரம் தொகுதியில் தனது வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை ஆணை பெறப் போவதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தெரிவித்துள்ளார். “நீதி கேட்டு நெடிய பயணம் போக வேண்டும்” என்ற கருணாநிதியின் கூற்றைப் போல, தாமும் இந்த நெடிய சட்டப் போராட்டத்திற்குத் தயாராகிவிட்டதாகக் கூறிய அவர், இறுதித் தீர்ப்பில் தனக்கே வெற்றி கிடைக்கும் என்று முழு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் பின்னணி குறித்து அவர் விவரிக்கும்போது, தபால் வாக்குகளில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கையெழுத்திட்ட 203 வாக்குகளும் செல்லாது என்பதே தனது வாதம் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த வாக்கு எண்ணிக்கையில் தமக்குக் கூடுதல் வாக்குகள் கிடைத்தபோதிலும், இந்த 203 சர்ச்சைக்குரிய வாக்குகளைச் சேர்த்ததால் அப்பாவு வெற்றி பெற்றதாகக் காட்டப்பட்டது. கொரோனா சூழல் மற்றும் அப்பாவு தரப்பின் வாய்தாக்களால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாமதமான நிலையில், அடுத்தடுத்த தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டதால் இனி வழக்கை விசாரிக்கத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

   

அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவின் அடிப்படையில் தற்போது அப்பாவு வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், இந்தத் தீர்ப்பில் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார் என்றும், அவரிடமிருந்து எந்தப் பண மீட்பும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தாம் உச்ச நீதிமன்றத்தை நாடி நிச்சயம் நீதி பெறுவேன் என்று இன்பதுரை உறுதியளித்துள்ளார்.