CINEMA
மருத்துவமனையை விட்டு ரஜினியை வெளியே அனுப்பாதீங்க, எம்ஜிஆர் டாக்டர்களுக்கு போட்ட கட்டளை – நடந்தது என்ன தெரியுமா?
எம்ஜிஆ்ர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் வளரும் நடிகராக இருந்தார். இதுகுறித்து ரஜினி ஒரு விழாவில் பேசியதாவது, எம்ஜிஆரால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன். 1978ம் ஆண்டில் இரவு, பகல் என ஷூட்டிங்கில் பங்கேற்றதால் நர்வஸ் பிரேக் டவுன் ஆகி, விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். வாரம் ஒருமுறை, இரண்டுமுறை மருத்துவமனைக்கு போனில் அழைத்து எம்ஜிஆர் என் உடல் நலம் குறித்து விசாரித்திருக்கிறார். 2 மாதம் கழித்து நான் பூரண குணமடைந்தேன்.
ஆனால் வெளியே விடவில்லை. ரஜினி குணமான பின், என்னிடம் பேசிவிட்டு அவரை அனுப்புங்கள் என எம்ஜிஆர் கூறியிருக்கிறார். உடனே நான் போனில் அவரிடம் பேசிய போது, டெல்லி செல்கிறேன். திரும்பி வந்த பின், என்னை அலுவலகத்தில் வந்து பாருங்கள் என கூறினார். 2 நாட்களுக்கு பின் தி.நகரில் உள்ள எம்ஜிஆர் அலுவலகத்தில் சென்று அவரை சந்தித்தேன். அப்போது, நடிகனுக்கு உடம்புதான் முக்கியம். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்டண்ட் பண்றதுக்கு ஆட்கள் உள்ளனர். அவர்கள் அதை செய்யட்டும். சீக்கிரமாக, நல்ல குடும்ப பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொள்ளுங்கள். பெண் பார்த்தவுடன் என்னிடம்தான் முதலில் சொல்ல வேண்டும். திருமணத்துக்கு நான் வருகிறேன் என்றார்.
அதன்பிறகு லதாவை பிடித்துப்போய்விட்டது. என் அண்ணாவிடம் சொல்லாமல், முதலில் அதை எம்ஜிஆரிடம்தான் சொன்னேன். ஆனால் லதா வீட்டில் யோசித்தார்கள். திருமணத்துக்கு சம்மதம் தர அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை. சினிமாக்காரர் என்பதால் பெண் தர யோசித்தார்கள். இப்படியே 6 மாதங்களாகி விட்டது. ஒருமுறை எம்ஜிஆர் என்னிடம் விசாரித்த போது, பெண்ணுக்கு சம்மதம்தான். ஆனால் அவர்கள் வீட்டில் ஒத்துக்கொள்ள தாமதம் செய்கின்றனர் என்ற தகவலை சொன்னேன்.
பிறகு இரண்டே நாட்களில் லதா குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். லதா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் ஒய் ஜி பி குடும்பம். எம்ஜிஆருக்கு ஒய்ஜிபி தெரிந்தவர் என்பதால், அவரை அழைத்து எம்ஜிஆர் பேசி இருக்கிறார். ரஜினி ரொம்ப நல்ல பையன். கொஞ்சம் கோபக்காரன். மற்றபடி உங்கள் பெண்ணை நல்லபடியாக வெச்சுக்குவார். தைரியமாக பெண் கொடுங்க என பேசியிருக்கிறார். அதன்பிறகே எங்கள் திருமணம் நடந்தது. எனக்கு ஒரு நல்ல மனைவி வாய்த்து, நான் சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் எம்ஜிஆர்தான். இதை தற்போது உள்ள ஒய்ஜிபி அவர்களின் மனைவியிடம் கேட்டாலும் தெரிந்துக்கொள்ளலாம் என விழாவில் பேசி இருக்கிறார் ரஜினிகாந்த்