கோயம்புத்தூர் மாவட்டம் கஸ்தூரி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி நிகாரிகா. இவரது குடும்பத்தினர் விஜய் வீட்டில் தான் தங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் தனது மனைவியின் தங்கை வர்ஷாவின் ஸ்கூட்டர் ஆர்சி புத்தகத்தை வைத்து நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி சில மாதங்கள் தவணை தொகையை சரியாக செலுத்தினார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக தவணை தொகையை செலுத்தாததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விஜயை தொடர்பு கொண்டு பணம் கேட்டனர். ஆனாலும் அவர் பணம் கொடுக்காததால் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பிரவீன் குமார், ஹரி பிரகாஷ் உள்ளிட்ட 6 பேர் விஜயின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
மேலும் வர்ஷாவை காரில் கடத்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது அவர் கூச்சலிட்டதால் வர்ஷாவை அங்கேயே விட்டுவிட்டு 6 பேரும் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிருஷ்ணவேணி உள்பட6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
