சென்னை மாவட்டம் கோட்டூர்புரம் போலீசார் கடந்த 2009-ஆம் ஆண்டு மது போதையில் தகராறு செய்ததாக பழனி என்பவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால் பழனியை போலீசார் தாக்கியுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பழனி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பழனியின் தந்தை ரங்கநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் பழனியின் மரணத்திற்கு காவல்துறையினரின் தாக்குதல் தான் காரணம் என அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த பி.ஆறுமுகம், தலைமை காவலர்களான மனோகரன், ஹரிஹரசுப்ரமணியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
