தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல் தற்பொழுது ஆந்திராவிலும் அரங்கேறி வருகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை, கடந்த மாதம் ஏலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் யூடியூபர் பிரஸ்ன ராவண் என்பவர் கடுமையாக விமர்சித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், ஆந்திரா போலீசார் ஹைதராபாத்தில் இருந்த அவரை நள்ளிரவில் அதிரடியாகக் கைது செய்தனர். எனினும், இந்த வழக்கில் கைது செய்ய முகாம்மியமான காரணங்கள் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது.
ஆனால், அவர் சிறையிலிருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே மற்றொரு வழக்கில் போலீசார் அவரை மீண்டும் கைது செய்தனர். அதற்கும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து ஜாமீன் வழங்கிய நிலையில், தற்பொழுது மச்சிலிப்பட்டினம், குடிவாடா என ஆந்திராவின் பல்வேறு மாவட்ட போலீசாரும் பிரஸ்ன ராவண் மீது அடுத்தடுத்து புதுப்புது வழக்குகளைப் பதிவு செய்து, தொடர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவையும் மீறி ஒருவரை முடக்க நினைக்கும் இந்தத் தொடர் கைது நடவடிக்கை தற்பொழுது அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
“நீதிமன்றம் மீண்டும் மீண்டும் தவறு என்று கூறியும், இன்னும் 30 வழக்குகள் போட்டு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்களே… வெட்கமில்லையா?” ஆந்திர காவல்துறையின் இந்தத் தொடர் கைது நடவடிக்கையை நடிகர் பிரகாஷ் ராஜ் வன்மையாகக் கண்டித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நள்ளிரவில் கைது செய்து பெரிய பில்டப் கொடுத்து அவரை ஆந்திராவிற்கு கூட்டிச் சென்றீர்கள். நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தும், மீண்டும் மீண்டும் புதிய வழக்குகள் போட்டு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள்; இப்படிச் செய்ய உங்களுக்கு வெட்கமில்லையா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் எச்சரித்துள்ள அவர், யூடியூபர் பிரஸ்ன ராவணனை ஆந்திர அரசு விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
