கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த குளகாரன்பட்டியை சேர்ந்த வினிதா என்ற 21 வயது கல்லூரி மாணவி மீது காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் பி ஃபார்ம் படித்து வரும் வினிதா உடல் நலக்குறைவால் தன்னுடைய வீட்டுக்கு வந்திருந்தபோது நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் ரஞ்சித் கொதிக்கும் சமையல் எண்ணெயை ஜன்னல் வழியாக அவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் தீக்காயம் அடைந்த வினிதா வலி தாங்க முடியாமல் கதறியதை கேட்டு பெற்றோர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வினிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. காதலை மறுத்ததால் அரங்கேறிய இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
