தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலந்தலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன். 30 வயதான இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வருகிறார். இவர் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதமிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது தோப்பூர் விளக்கு அருகே அவரை மர்ம நபர்கள் மூன்று பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சாலை ஓரத்தில் உள்ள மரக்கடைக்குள் ஓடியுள்ளார்.
ஆனால் அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி உள்ளார்கள். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
