தெலுங்கானா மாநிலம் ரேச பள்ளி கிராமத்தை சேர்ந்த எதிருகட்ல சதீஷ் (29) என்ற வாலிபர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததால் பெண் வீட்டார் வாலிபரை அழைத்து கண்டித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதனை அறிந்த சதீஷ் அந்தப் பெண்ணை தான் காதலிப்பதாகவும் பெண் கேட்டு யாரும் வரவேண்டாம் என்றும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த விஷயம் எப்படியோ பெண் வீட்டாரருக்கு தெரிய வர ஆத்திரமடைந்த அவர்கள் சதீஷ் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு கைகளப்பாக மாற பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரை அடித்தே கொன்றனர். உடனே இது குறித்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் அப்பகுதியில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
