டெல்லியில், தனது காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யவிருப்பதை அறிந்த 26 வயது இளம்பெண் ஒருவர், ஆத்திரத்தில் மணப்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி இந்திரா விஹார் பகுதியில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பலத்த தீக்காயமடைந்த பாதிக்கப்பட்ட பெண், தற்போது ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் மணமகனுடன் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. தனது காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை ஏற்க முடியாத அவர், ஆத்திரத்தில் இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், தலைமறைவாக இருந்த அந்தப் பெண்ணைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
