மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம், புனேஷ்வர் கோவில் அருகே ‘தன்ஹா போலா’ திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புல்சவாங்கி பகுதியைச் சேர்ந்த பாலி மரோட்டி (25) என்ற இளம்பெண் அங்கிருந்த கைகளால் இயக்கப்படும் ‘ஜெயண்ட் வீல்’ ராட்டினத்தில் ஏறியுள்ளார்.
ராட்டினம் சுற்றத் தொடங்கிய சில வினாடிகளிலேயே அப்பெண்ணின் நீண்ட தலைமுடி ராட்டினத்தின் சுழலும் பேரிங்கில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் வலியால் கத்தி கூச்சலிட்ட போதிலும், ராட்டினம் வேகமாகச் சுழலத் தொடங்கியதால் உடனடியாக அதை நிறுத்த முடியவில்லை. ராட்டினத்தின் வேகத்தில் தலைமுடி பலமாக இழுக்கப்பட்டதில், அவரது உச்சந்தலையின் தோல் முழுவதுமாகப் பிய்ந்து தனியாக வந்தது.
அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ராட்டினத்தை நிறுத்தி அப்பெண்ணை மீட்டனர். தலையில் மிகக் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட பாலி மரோட்டி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ பரவியதைத் தொடர்ந்து, இதுபோன்ற பொருட்காட்சிகளில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், ராட்டினங்களில் ஏறும்போது தளர்வான ஆடைகள் மற்றும் தலைமுடியை கவனமாகக் கட்டி வைக்க வேண்டும் என்றும் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
