ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (25) என்ற இளைஞர், சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்தார். மாதம் ரூ. 25,000 சம்பளம் வாங்கி வந்த இவர், ஆன்லைன் முதலீட்டில் பெருமளவில் பணத்தை இழந்து பெரும் கடனில் சிக்கியுள்ளார்.
கடும் கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஸ்ரீராம், கடனை அடைப்பதற்காகக் குறுக்கு வழியில் இறங்கி நகை அடகுக் கடையில் திருடத் திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி, கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு சென்னை இந்திரா நகர் 17-வது குறுக்குத் தெருவில் உள்ள மங்கள்சந்த் என்பவருக்குச் சொந்தமான நகை அடகுக் கடையின் பூட்டை உடைக்க முயன்றுள்ளார்.
அப்போது பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, தப்பியோட முயன்ற ஸ்ரீராமை மடக்கிப் பிடித்துத் திருவான்மியூர் போலிஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆன்லைன் நஷ்டத்தால் வந்த கடனை அடைக்கவே முதன்முறையாகத் திருட முயன்றதாகவும், அனுபவம் இல்லாததால் மாட்டிக்கொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலிஸார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
