தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கே.பி.எச்.பி காவல் எல்லைக்குட்பட்ட ஃபேஸ்-6 பகுதியில் அமைந்துள்ள பஞ்சவடி அபார்ட்மெண்ட்டில் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சீதல் (32) என்பவர், தனது கணவர் சோனு புருஷோத்தமன் மற்றும் 4 வயது மகளுடன் அந்த குடியிருப்பின் 5-வது மாடியில் வசித்து வந்தார். கணவர் எஸ்பிஐ வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
சீதல் கடந்த சில காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதற்கான மருத்துவச் சிகிச்சைகளை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலையில் குடியிருப்பின் மாடிப் பகுதிக்குச் சென்ற அவர், எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த கே.பி.எச்.பி போலீசார், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
